செவ்வாய், மார்ச் 18, 2014

த த ஜ / இ த ஜ விடம் சில கேள்விகள்!!!

3 கருத்துகள் :
முன் குறிப்பு :
த த ஜ - தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் 
இ த ஜ - இந்திய தவ்ஹீது ஜமாஅத்.

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவர்மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அமைவதாக!

இந்தியாவின் தலைவிதியை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அல்லது அதன் தாக்கத்தால் பல ஆண்டுகளுக்கு மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, எல்லோரையும் போலவே சக இந்தியனான என்னையும் தேர்தல் காய்ச்சல் தொற்றிகொள்ளவே செய்துள்ளது...

ஏன்! இது இத்துனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசவேண்டும்? பாமரனும் அறிவான் இந்த தேர்தலில் குஜராத்தின் கொலை நாயகன் மோடி இந்தியாவின் அடுத்த பிரதம வேட்பாளராக நிருத்தப்பட்டுள்ளதே, அதற்கான காரணம் என்று!

இப்படிப்பட்ட இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரியான மோடியை எப்படி முறியடிப்பது என்பதே நாட்டுப்பற்றுள்ள சாதாரண நன்மக்களின் கவலையாக இருக்கும்.

இந்த நேரத்தில் முஸ்லிம்கள் நாம் இத்தேர்தலை எப்படி எதிர் கொள்ளப்போகிறோம்? என்பதை சிந்திக்க முயன்றாலே தலை சுற்றத்தான் செய்கிறது.. மக்களை முறையாக வழிநடத்த பொருபேற்று தத்தமது இயக்கங்களில் அவர்களை அங்கத்தினராக்கிய இயக்கத் தலைவர்களின் தடம் மாறிய முடிவுகளே அதற்கு காரணம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரே! உங்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன? 

அதிமுக வை ஆதரிப்பது. போதாத குறைக்கு அதன் வெற்றிக்கு பாடுபடுவது?  

ஏன்? - இட ஒதுக்கீட்டுக்காக ஆணையம் அமைத்ததற்கு பகரமாக ஆதரவு!!

நீங்கள் கோரியது என்ன? - முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியை லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு வலியுறுத்தியதை மதித்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வேண்டும் என்று தமிழக முதல்வரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
முஸ்லிம்கள் இடஒடுக்கீட்டை அதிமுக அரசு உயர்த்தித்தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிப்பதுடன் அதன் வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

சுட்டி: http://www.tntj.net/228128.html

கிடைத்தது? - நீங்கள் கேட்டதையா செய்தார்?? இட ஒதுக்கீட்டுக்காக அம்மையார் ஆணையம் அமைத்துள்ளாராம்! இதற்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு அம்மையாரிடம் போராடத்தான் செய்தோம். அம்மையார் அப்பவும் ஆணையம் தான் அமைத்ததாக இப்போதும் சொல்கிறார்.. இப்போது அமைத்திருக்கும்  இந்த ஆணையம் இந்த தேர்தலில் முஸ்லிம்களை குறிப்பாக ததஜவை கவரவும், அவர்களின் ஆதரவை பெறவும், பின் ஆட்சி முடிவு வரை ஆணைய பரிந்துரைக்காக காத்திருந்து வழக்கம் போல நம்மை ஏமாற்றவுமெ என்பதை அம்மையாரை அறிந்தவர்கள், முந்தைய நடவடிக்கை புரிந்தவர்கள் உணரமுடியாமலா இருக்கிறது?

ஆயிரம் முறை நீதிமன்றத்தில் குட்டுவாங்கும் அம்மையார் நினைத்திருந்தால் கேட்ட இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி உடனே உத்தரவு பிரப்பித்திருக்க்க முடியும், நினைத்ததை செய்யக்கூடியவர் அவர் என்பதை நாம் நன்கு அறிவோம்.. சாத்தியப்படாத எத்துணையோ விடயங்களில் முடிவேடுத்து பின் அம்மையார் பின்வாங்குவதை நாம் கண்டிருக்கிறோம்..

சமீபத்தில் மூவர் தூக்கு தண்டனை ரத்தானதும், மத்திய அரசின் ஆலோசனையின் பேரிலே விடுவிக்க முடியும் என தெரிந்தும் உடனடி விடுதலைக்கு உத்தரவிட்டு, இப்போது மேல்முறையீடு அது இதுவென அது இழுத்தடிக்கப்பட,  நேற்றுவரை அவர்களது பரோலுக்கு கூட அனுமதி வழங்க மறுத்தவர் இப்போது சாத்தியப்படாது என அறிந்தும் ஒரு உத்தரவை பிறப்பித்து, தமிழர்களின் ஆதரவை பெற்றதை போலவே ததஜவின் ஆதரவை பெற குறைந்த பட்சம் சட்டசிக்கலுடன் கூடிய மூவர் விடுதலை பொன்ற கண்துடைப்பு கையெழுத்து கூட போடவில்லை.. ஆணையம் அமைத்துள்ளாராம்..எத்துனை ஆணையங்கள் தான் முழுமை அடைந்துள்ளன.. எத்துனை ஆணையங்களின் பரிந்துரை தான் சட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளோம்.. குறிப்பாக முஸ்லிம்கள் விசயத்தில்?

முதலில் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே ஆதரவு என நிலைப்பாடு கொண்ட நீங்கள் இப்போது பேருக்கு வைத்த ஒரு ஆணையத்துக்கே சமுதாய ஓட்டுக்களை அள்ளிக்கொடுப்பது முறையா?

எங்கும் எக்கோரிக்கையிலும் உறுதிபட நிற்கும் இயக்கமாகவே ததஜவை கண்டுள்ள எனக்கு இப்படி ஒன்றுமிலாத விசயத்தில் வளைந்து கொடுப்பதை ஏற்க இயலவில்லை...

இப்படி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து ஆண் பெண் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மக்களை திரட்டி, சிறை நிரப்பி, கடைசியில் அந்த போராட்டத்தின் பலன் தாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லியது போல இடஒதுக்கீட்டை கொடுத்தால் (ஆணையம் அல்ல) ஆதரவு. இல்லாவிட்டால் ஆதிமுகவுக்கு எதிராக முடிவு எடுப்போம் என நீங்கள் எடுத்த நிலைபாட்டில் உறுதி கொண்டல்லவா உங்களுடன் மக்கள் கைகோர்தார்கள்.. இந்த ஒன்றுக்குமற்ற ஆணையம் அமைப்பதற்க்காகவா?

மோடிக்கு ஆதரவில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கும் நீங்கள் மோடிக்கு யார் ஆதரவளிப்பார்களோ அவர்களை இனம் காண மறுப்பதேன்!

வழுவாக கைகொடுக்கும் அரசியல் கட்சிகளையே நினைத்ததும் கைகழுவும் பழுத்த நாகரிகமுடையவரிடம், சிறுபான்மை முஸ்லிம்கள் எம்மாத்திரம்? இடஒதுக்கீட்டுக்கான ஆணைய உத்தரவு வேடிக்கையை, விளையாட்டாய் பார்த்துவிட்டு அதற்கு பகரமாக சமுதாய ஓட்டுக்களை தாரை வார்ப்பது முறையா? 

அதிமுகவின் சமிபத்திய அரசியல் வியுகங்களை ஓரளவிற்கு பாமரனே புரிந்துகொள்ள முடியும் போது? தாங்கள் இடஒதுக்கீடு எனும் சேனம் கட்டிக்கொண்டு மற்றவைகளை பார்க்க மறுப்பது நமக்கு மாபெரும் பின்னடைவையும், ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்காலத்தில் நமக்கான பங்களிப்பை வழங்கும் சமயத்தில் இப்படி குறுகிய நோக்கோடு தவறான முடிவெடுப்பது மாபெரும் கையறு நிலையல்லவா?

அம்மையாரின் தேர்தல் வியூகங்க்களை பார்த்தாலே நமக்கு புரியாதா? 
பாஜக வோடு கூட்டணி இல்லை. கூட்டணி வைத்தால் தமிழகத்தில் ஒரு முஸ்லிமிடமும் ஒட்டு கேட்க முடியாது, இன்னும் பாஜக வை அறிந்த நடுநிலையாளர்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என நாசுக்காக விலகி இருக்கிறார்..

ஆரம்பத்தில் பிரதமர் கனவில் பிரச்சாரம் செய்து வந்தவர், தற்சமயம் இறங்கி வந்து மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசில் பங்கு கொள்ள ஆதரிக்குமாறு பிரச்சாரம் செய்கிறார்.. 

காங்கிரஸ் திமுக என ஒருவரையும் விடாமல் விமர்சனம் செய்யும் அதிமுக, தன்னை எதிர்த்து தமிழகத்தில் களம் காண தனது எதிரியை(தேமுதிக) கூட்டாக்கியும் கூட பாஜகவை மறந்தும் விமர்சிப்பதில்லை.. அதனால் தனது தற்போதைய பிரதான எதிரியான விஜயகாந்தும், அம்மையாரின் விமர்சன அம்புகளில் இருந்து கரிசனமாக பாதுகாக்கப்பட்டுள்ளார்....

அடுத்து! தமிழக சிவசேனா  என்னும் கட்சி  அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க ததஜவும் ஆதரவு அளிப்பது எந்த முஸ்லிமுக்கும் முகம் சுழிக்க வைக்கும் நிகழ்வெ, அதை உங்களிடம் கேட்க, நீங்களொ சிவசேன ஒரு லெட்டர் பெட் இயக்கம் அதை போருட்படுத்த தேவையில்லை என சொன்னிர்கள்..

லெட்டர் பெட் இயக்கத்துக்கு அதும் ஹிந்துத்துவ இயக்கத்துக்கு அதிமுகவின் மீது என்ன அத்துணை கரிசனம்? கூட்டணிக்காகவும், ஓட்டுக்காகவும் தனது தாய் இயக்கம் தமிழகத்தில் பிச்சை எடுக்கும் நிலையில், அவர்களை ஒதுக்கிவிட்டு அதிமுகவை ஆதரிக்கவேண்டிய அவசியம் என்ன என்று அவர்களை ஒரு வார்த்தை கேட்டால் சொல்வார்கள். மோடிக்கு ஜெயலலிதா நெருக்கமானவர், நாளை மோடி ஆதரவு கேட்டால் ஜெயலலிதா மறுக்கமாட்டார் என்று!

அதை தவிர வெறு என்ன காரணம் இந்த ஹிந்துத்துவ கட்சிக்கு அதிமுகவை ஆதரிக்க இருக்கமுடியும்?

மதவாதத்திற்கு எதிராக தீவிரமாக இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளை, இன்னும் எந்தவித சீட் பேரம் கூட செய்யாமல் அமைதியாக கொடுத்ததை வாங்கிக்கொள்ள தயாராக இருந்தவர்களை ஏன் அம்மையார் கடைசி நேரத்தில் கைகழுவினார்? அவர்களுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது தானே? ஏன் ? அவர்கள் இருந்தால் நாளை மோடியுடன் கைகுழுக்க முடியாது என்பதை தவிர வெறு ஒற்றை காரணம் சொல்ல இயலுமா?

  • பிரதமர் கனவை ஒதுக்கியாகிவிட்டது!
  • காங்கிரஸ் அரசை விழ்த்த வியுகம் வகுத்தாகிவிட்டது!
  • மதவாத எதிர்ப்புள்ள கம்யூனிஸ்டுகளை கைகழுவிவிடாகிவிட்டது 
  • முன்றாவது அணி குறித்து பெயருக்கு கூட பிரச்சாரம் இல்லை..
  • பாஜக குறித்து ஒரு வார்த்தை விமர்சனம் இல்லை.
  • காங்கிரஸ் அல்லாத மத்திய அரசில் பங்கு பெற வெண்டும் என பிரச்சாரத்தில் பட்டவர்த்தனமாக பேசியும் ஆகிவிட்டது.

இத்தனையும் உணர்ந்த எந்த முஸ்லிமும் தெளிவாக அறிவான தான் பாஜகவின் தோழி என, அதனால் முஸ்லிம்கள் தனக்கு ஓட்டளிக்க போவதில்லை என்பது அவருக்கே திண்ணமாக தெரியும்... இன்னும் முஸ்லிம்களுக்கு தான் செய்ததாக சொல்லிக் கொண்டு ஒட்டுக்கேட்க எந்த காரணிகளும் இல்லாத நிலையில்தான்.. ததஜ இந்த போராட்டத்தை முன்னெடுத்தது...

அதை அருமையாக தனக்கு சாதகமாக அம்மையார் மாற்றிக் கொண்டு, பெயருக்கு ஆணையம் அமைத்ததை, பெயருக்கு ததஜவும் தனது இடஒதுக்கீட்டுக்கு (ஆணையத்துக்கு அல்ல) ஓட்டு, எனும் வழுவான பிடியில் இருந்து காரணமே இல்லாமல் இறங்கி வந்து  இந்த ஆணையத்துக்கு பதிலாக ஓட்டளிக்க வழிய போய் ஆதரவுக்கரம் நீட்டிவிட்டது.

அது போதா குறைக்கு அதிமுகவின் வெற்றிக்கு முழுவீசில்  பிரச்சாரம் செய்து பாடுபடவும் தானாக ஒப்புக்கொண்டுள்ளது...

அரசியலில் ஈடுபடாத இயக்கம், யாருக்கும் வளைந்து கொடுக்காத இயக்கம் , போராடி சமுதாயத்துக்கு நலன் சேர்க்கும் இயக்கம், இட ஒதுக்கீட்டுக்காக ஓட்டளிக்க ஒப்புக்கொண்டதாக வைத்துக்கொண்டாலுமே! ஒரு அறிக்கை, மற்றும் அனைத்து கிளைகளுக்கும் அதிகாரப்பூர்வ கடிதம் எழுதி அதிமுகவுக்கு வாக்களிக்க சொன்னாலே போதுமே!! அதையும் தாண்டி பிரச்சாரம் செய்ய வெண்டிய அவசியம் என்ன?

உங்களது வார்த்தையை அடிபிரலாமல் பின்பற்றும் கட்டுக்கோப்பான தொண்டர்களை கொண்ட நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதாதா? ஒட்டு விழுமே!! பிரச்சாரம் எதற்கு?? இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு எனும் உங்களது உடன்படிக்கை அத்துடன் முடிவுக்கு வருகிறது.. எதற்கு கூடுதல் அரசியல் பிரச்சாரம்???

தொண்டர்களை சமுதாய நலனுக்கு தெருவில் இறங்க சொன்னீர்கள் சரி.. சமுதாய நலன்?? கருதி ஓட்டளிக்க சொல்வதும் சரியே! ஆனால் அதிமுக வெற்றிக்கு முழுவிச்சில் பிரச்சாரம் செய்ய அழைப்பதும், அவர்களை தாங்கள் வெறுக்கும் அரசியல் வேலைகளில் பங்குகொள்ள செய்வது எதற்கு???

மோடி குறித்து யாரும் நமக்கு பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு நாமே அதிகமாக பாடம் கற்றுள்ளோம்... அது போதாதென்றே...திரு.மார்கஸ், திருமாவளவன், சன்டிவி வீரபாண்டியன், சீமான், கம்யுனிஸ்ட்டுகள், பெரியார் இயக்கத்தவர்கள்  என பல்வேறுபட்ட அமைப்பினரும் மக்களும் நமக்கும் நாட்டுக்கும், எச்சரிக்கை கொடுத்துக்கொண்டிருக்க... 

எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு இட ஒதுக்கீட்டுக்காக அவர்களை ஆதரிக்கிறோம் எனும் உங்களது கூற்றை அறிவுப்பூர்வமாகவோ, உணர்வுப்பூர்வமாகவோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!

வரப்போகும் தேர்தல் மத்திய அரசாவதாலும், அதில் மோடி முன்னிலையில் இருப்பதாலும், அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுமானால் , இட ஒதுக்கீட்டுடன், சில நிபந்தனைகளையும் நியாயப்படி வைத்திருக்கவேண்டும்,..
  • மத சார்பற்ற அரசில் பங்கெடுக்க வேண்டும் 
  • பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும் 
  • தீவிர வாத தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் 
  • மதக்கலவர தடுப்பு மசோதாவை நிறைவேற்ற வெண்டும்.
  • பாபர் மசூதி இடிப்பில் நியாயம் வசங்க வெண்டும்,
  • சேது சமுத்திர திட்டத்தை மறு ஆய்வுக்கு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் 
  • குஜராத் கலவரத்தில், முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்க வெண்டும்.
இவைகளுக்கு செவி சாய்க்கும் பட்சத்தில் இடஒதுக்கிட்டோடு அதிமுகவை ஆதரிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை... ஆனால் அனல் பறக்கும் கேள்விகளை முன்வைத்து எதிராளியை திணறடிக்கும் திறன்கொண்ட ததஜ, மற்றும் அதன் தலைவர் இவ்விசயத்தில் மத்திய அரசில் நமக்கு சாதகமான எவ்வித கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் முன்வைக்காமல் பச்சைக்கொடி காட்டுவது... பல்வெறு கேள்விகளை எழுப்புவதாகவே அமைகிறது... (மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான்)


ஆனால் இவை அனைத்திற்கு மாற்றாக, மதசார்பற்ற கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாமிய கட்சிகள், பெரும்பாலும் அனைவரும் ஒன்றிணைந்திருக்கும், நமது முந்தைய கோரிக்கையான 3.5% இட ஒதுக்கீட்டை  உத்திரவாதப்படுத்தி சட்டமாக்கி இப்போது பயனுரச்செய்த திமுக, அதன் கூட்டணி கட்சிகளும், இன்னும் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க ஆதரவளிப்போம் என மொழிந்துள்ள கருணாநிதி அவர்களின் கூட்டணிக்கு வாக்களிப்பதே... பாமரத்தனமாக சிந்தித்தாலும், அறிவுப்பூர்வமாக சிந்தித்தாலும், அரசியல் ரீதியாக சிந்தித்தாலும் சரியாகப்படுகிறது...

அங்கு உங்களின் எதிரியாக நீங்கள் கருதும் தமுமுக இருப்பதால் சங்கடமாக நீங்கள் (சமுதாய நலன் கருதி உணரக்கூடாது) உணர்ந்தால், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதே ஓரளவிற்கு சரியான முடிவாக இருக்கும்...

இட ஒதுக்கிடு! அது எத்துனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அது சமுதாய முன்னேற்றத்திற்கு அவசியம், என்பதில் முழுவது உடன்படுகிறேன்... ஆனால் அதை முன்னிறுத்தி "இந்த தேர்தலை" சந்திப்பது, என்பது.... இன்றைக்கு செய்தாகவேண்டிய உயிர்காக்கும் இருதய அறுவை சிகிச்சையை ஒதுக்கிவிட்டு, நூராண்டு வாழவேண்டி சர்வரோக நிவாரணி லேகியத்தை கிண்டுவதற்கு சமமே!!! ...

மேற்கண்ட அத்துனை கேள்விகளும் விமர்சனங்களும் இந்திய தவ்ஹீது ஜமாத்தினருக்கும் முற்றும் முழுதாக பொருந்தும்.. ததஜவோ எதோ கேட்க எதோ கிடைத்ததை வைகோ போல் வாய் மூடி எற்றுக்கொண்டு ஆதரவு என சொல்கிறது... ஆனால் நீங்கள் எதற்காக அதிமுகாவை ஆதரிக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தவே இல்லை... உங்களது இனையதளம் பழைய செய்திகளை அரைத்துக் கொண்டு இருப்பதால்.. அதில் இருந்து காரணங்களையோ, அல்லது விளக்கங்களையோ பெற இயலவில்லை... 

சமுதாயத்தை முன்னிறுத்தி முடிவெடுக்கும் போது, தலைவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

அன்புடன் 
ரஜின் 


IMG-20140212-WA0002
IMG-20140212-WA0003



20140213_131231

http://www.tntj.net/228128.html

இடஒதுக்கீடு
தனி இடஒதுக்கீடு கோரிக்கை ஒரு தனி இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கை என்பதை ஜனவரி 28 போராட்டம் மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு தெள்ளத்தெளிவாக அறிவித்துவிட்டது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியை லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு வலியுறுத்தியதை மதித்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வேண்டும் என்று தமிழக முதல்வரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
முஸ்லிம்கள் இடஒடுக்கீட்டை அதிமுக அரசு உயர்த்தித்தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிப்பதுடன் அதன் வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
கடந்த இரண்டு தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களை ஏமாற்றியதையும், சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட பேரணியிலும், மாநாட்டிலும் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்பும், இந்தத் தீர்மான விபரங்களை பிரதமரிடமும், சோனியா காந்தி அவர்களிடமும் நேரிலேயே தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் விளக்கம் கூறி வலியுறுத்திய பின்பும், முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

வியாழன், ஜனவரி 24, 2013

விஸ்வரூபம்: முஸ்லிம்களின் மனநிலை என்ன?

21 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

பிழையான எண்ணம் கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக சித்தரிக்கும் கமல்ஹாசன் மனம் திருந்த மனதார பிரார்த்திக்கிறோம்.
விஸ்வரூபம் எடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனின் திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்சனை, அடிப்படையில் முஸ்லிம்களின் எதிர்ப்பை பின்னனியாகக் கொண்டு இன்றைய நாளைக் கடந்தவண்ணம் இருக்கிறது. 

இந்த பிரச்சனை இப்போது எந்த அளவில் பேசப்படுகிறது? அல்லது பேசப்பட வைக்கப்படுகிறது என பார்த்தால்? இந்தப் படம் கொண்டிருக்கும் கருத்துக்களையோ, அல்லது அது உண்டாக்கவிருக்கும் தாக்கம் குறித்தோ சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ யாரும் பேசத் தயாராக இல்லை. இதை எதிர்த்து நிற்கும் முஸ்லிம்களை, அவர்களது எதிர்ப்பு கோஷங்களை, போராட்டங்களை மட்டுமே முன்னிருத்தி இந்த விசயம் பார்க்கப்படுகிற்து.

ஏன் இந்த போராட்டம்? எதற்கு இத்தனை கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், இதன் பின்னனியாக முஸ்லிம்கள் எதைக் கையில் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் விரிவாக இல்லாவிடினும் குறைவாகவாவது அலசிப்பார்க்கவேண்டியது அவசியம்.

ஒரு பிரச்சனையை அணுகும் போது இருதரப்பு வாதங்களையும் கணக்கில் கொண்டு பார்வையை அதன்மீது சீராக்குவதே குறைந்த பட்ச நியாயமாக இருக்கும்.

முதல் தரப்பாக கமல்ஹாசன் குறித்து அதிகமாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவு, பெரிய முயற்சி, புதிய தொழில் நுட்பம், என பல காரணிகள் அவரது தரப்பில் நியாயங்களாக முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது தரப்பான முஸ்லிம்களின் நிலையை பார்வைக்கு கொண்டுவரும்முன்,  மையப்பொருளான சினிமா என்ற ஒன்று எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது, அல்லது ஒரு கனம் மனதில் இறுத்திக்கொள்வது, பிரச்சனையின் தீவிரத்திற்கான காரணத்தை அறிந்திட உதவும்.

சினிமா: இது  ஊடகங்களுக்கெல்லாம் தலை. ஒரு செய்தியை உச்சபட்சமாக  மக்கள் மத்தியில் எத்தனை தூரம் எடுத்துச்செல்ல முடியுமோ அந்த எல்லையை தொட்டு, ஒரு கருத்தை மனதில் பதியவைக்கும் காத்திரமான கருவி. 

இதன் வீரியம் அலாதியானது. சாதாரணமான ஒரு நிகழ்வை தக்க கோணத்தில் காட்சிப்படுத்தி, அதற்கு பின்னனியில் பொருத்தமான வசனம், இசையுடன் கூடிய நிகழ்வாக உருவகப்படுத்தி அசாதாரணமாக்கும் வல்லமை பொருந்தியது. அப்படிப்பட்ட காட்சி ஊடகத்தில் உருவாகும் ஒரு கருத்து, மக்களை சென்றடைந்தால், அது சரியோ, தவறோ, அதன் பொருண்மை வீரியம் இழப்பதற்கு காலங்கள் ஆகும்..

என்ன இப்டி சொல்ரீங்க இந்தக்காலத்துல யாரு சினிமா பாத்து விசயத்த மனசுல வாங்கிறா.. இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம். எந்திர வாழ்க்கைல சில மணிநேரம் மனஓய்வுக்கான கருவி அவ்ளோதான். அப்டி சொன்னீங்கன்னா... உண்மைதான்..

இந்தகாலம் இல்ல, எந்தக்காலத்துலையும் யாரும் சினிமாவை பார்த்து நடைமுறை வாழ்க்கையை வடிவமைப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் எதார்த்த வாழ்வின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அச்சுப்பிசகாமல் பிரதிபலிக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

சரி! அப்படிப்பட்ட சினிமாவிற்கு சமூகத்தில் எத்தகைய பொருப்புகள் உண்டு.அது  தன் பொருப்புணர்ந்து செயல்படுதான்னு கேட்ட? மறுப்பதற்கு இல்லை என்பதைக் காட்டிலும் ஆழமான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை என்றே சொல்வேன். 

சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் மனதில் அசாதராண விசயங்களை பதிந்து பதிந்து, அதுகுறித்த தாக்கத்தை மழுங்கச்செய்வதை ஒரு கனம் யோசித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

முன்னொரு காலத்தில் அரைகுறை ஆடைகளும், ஆபாசசினிமாக்களும் கடும் எதிர்ப்புக்குள்ளாகின... பொதுவாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை முன்வைத்தாலும், குறிப்பாக பெண்களின் போராட்டம் பேசப்படும்படியாக இருந்திருக்கிறது.
இன்று? அப்படியான எண்ணம் ஆபாசம் அரைகுறை ஆடைகளுக்கு எதிரான சிந்தனை மொத்தமாக மழுங்கிப்போய் இருப்பதை உணர முடியும்.

இதுபோன்று வன்முறையையும் சொல்லலாம்.. முன்பு வன்முறையும், கொலை போன்ற பாதகங்களும் தீயவர்களுக்கே உரித்தான ஒன்றாக சினிமா படம்பிடித்தது. இப்போது ஆன்டி ஹீரோ எனும் கதாப்பாத்திரத்தின் மூலம் கொலைகளையும்,வன்முறைகளையும், அடிதடிகளையும் சர்வசாதாரண ஒன்றாக்கிவிட்டது. நிதர்சனத்தில் இன்றைய பிள்ளைகளிடம் இதன் விளைவைக் காணமுடியும்.

இப்படி தாக்கத்தை உண்டாக்கும் சினிமா, முஸ்லிம்கள் குறித்து என்னமாதிரியாக கருத்தை பதிவு செய்தது? செய்கிறது? என்பது மற்ற சமூகத்தாருக்கு ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும் சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அதை கவனத்தில் கொள்வதை தவிர்க்க இயலாது.

இந்த கவனஈர்ப்பு பொதுவாக எல்லா சமூகத்தாருக்கும் பொருந்தும். தன் சமூகம் குறித்து என்னமாதிரியான கருத்துருவாக்கம் வைக்கப்படுகிறது என்பதை எல்லா சமூகத்தினரும் கவனித்தே வருகின்றனர்.

பிராமணர்களை கேலிக்குள்ளாக்கும் படம் அவர்களை காயப்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கோ அது வெற்று கிண்டலாகவும், மிகப்பெரிய நகைச்சுவையாகவும் இருப்பதை பார்க்கமுடியும். 

முஸ்லிம்களை இந்த சினிமா உலகு எவ்வாறு புரிந்துவைத்திருக்கிறது. மிகச்சமீபகாலம் வரை அட்டைக்குல்லாவுடன், அருவருப்பான தமிழ் பேசும் மூன்றாம்தர மக்களாகவே புரிந்து காட்சிப்படுத்தி வந்தது.

இந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்களின் முகவரி உலக அளவில் என்பதைக்காட்டிலும், குறிப்பாக இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தீவிரவாதம் என்ற ஒன்று முஸ்லிம்களுக்கு அடைமொழியாகவே மாறிவரும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய மதஅரசியலும், ஊடகங்களும், முஸ்லிம்களை தீவிரவாதம் என்ற நிறக்கண்ணாடி இன்றி முன்னிருத்துவதே இல்லை. 

இதன் நீட்சியாக முழுக்க முழுக்க இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாத சக்திகளாக சித்தரித்து முழுநீள திரைப்படம் அதிக பொருட்செலவில் அழகிய பேனரில் வெளிவருவது இஸ்லாமியர்களுக்கு என்ன இனிப்பான செய்தியா?

இந்த கருத்துப் பதிவு மக்களை சென்றடைந்தபின், தயாரித்தவருக்கு லாபம் கிடைக்கிறது. பார்ப்பவர்களுக்கு, பொழுதுபோக்கும், கூடவே காட்சிப்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஒரு மனத்தோற்றம் உண்டாகிறது. 

காட்சிப்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு? அந்த மனத்தோற்றத்தின் விளைவல்லவா பரிசாகிறது? 

இதை குறித்து யார் சிந்திப்பது? எடுப்பவர்களோ, பார்ப்பவர்களோ சிந்திக்க கடமைப்பட்டவர்களாக இருக்கமுடியாது. அதன் பாதிப்பை உள்வாங்கும் சமூகம், உள்வாங்கிக் கொண்டிருக்கும் சமூகம் மட்டுமே சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறது.

இன்றை இந்தப் போராட்டமும் இந்தச் சிந்தனையின் விளைவே! இந்த போராட்டம் இரண்டு முக்கிய காரணிகளை மையமாகக் கொண்டு சுழல்கிறது. ஒன்று இஸ்லாம் இன்னொன்று முஸ்லிம்கள்.

அதென்ன இஸ்லாம் முஸ்லிம்கள்? என்றால் இப்படி பிரித்தறிவிக்க போதிய காரணங்கள் உண்டு.

முதலில் இந்த திரைப்படம் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரவாதத்திற்கு ஆதரவான ஒன்றாக புனைகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலக அளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சதிகளின் நீட்சியாக இதைப் பார்க்கலாம், அல்லது இஸ்லாம் என்ற ஒன்றை சரியாக புரிந்துகொள்ளாததன் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.

ஆக எதுவாயினும், பெரும்பான்மையோ சிறுபான்மையோ பரவலாக மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் ஒரு நெறியை, ஒரு மார்க்கத்தை தவறாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மற்ற கொள்கைகளை பின்பற்றும் மக்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதில் பல்வேறு படித்தரங்கள் இருக்கலாம். ஆனால் எந்த மக்களைக்காட்டிலும் முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு அதன் கொள்கைக்கும் தனிச்சிறப்புமிக்க உண்ணதமான தரத்தைக்கொடுக்கிறார்கள். இதை வெறுமனே கொள்கை என்ற அளவில் பார்ப்பதைக்காட்டிலும் தங்களைப் படைத்த இறைவன், தங்கள் வாழ்வை நெறிசெய்து கொள்ள கொடுத்திருக்கும் ஒப்பற்ற வழிமுறையாக பார்ப்பதை பலரும் அறீந்திருப்பர். அப்படியான கொள்ளை எதிர்மறை கருத்துத்தோய்ந்து மக்களுக்கு காட்டப்படும் போது அதை பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமில்லாத ஒன்று.

அடுத்தது முஸ்லிம்கள். முஸ்லிம்கள் என இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை இஸ்லாத்தில் இருந்து இந்த இடத்தில் தனிப்பட்டு பேசக்காரணம் உண்டு. இஸ்லாம் தோன்றிய இத்தனை காலத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் இல்லாமல் இல்லை. எந்த மதத்திற்கும் இல்லாத அளவில் எல்லா காலத்திலும் இஸ்லாத்திற்கு எதிராக விமர்சனங்கள் இருந்தே வந்திருக்கிறது. அது சமகாலங்களில் சரியாக எதிர்கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது. அதுவே இன்றளவும் இஸ்லாம் புதுப்பொழிவுடன் இருக்க காரணமும் கூட..

ஆனால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் இஸ்லாத்தையோ, முஸ்லிம்களை பெரிய அளவில் பாதித்ததில்லை. ஆனால் இன்றைய முஸ்லிம்களில் நிலை அவ்வாறில்லை. 

முஸ்லிம்களை சமூகத்தில் இருந்து திட்டமிட்டு அப்புறப்படுத்தும் பணி நூற்றாண்டுத் திட்டங்களாக, இந்தியத்திருநாட்டில் நடைபெற்றுவருகிறது. அதன் முதல் இரண்டாவது கட்டங்களாகவே இன்றைய காலம் இருந்துவருகிறது.முழுக்க முழுக்க முஸ்லிம்களை மற்ற சமூக மக்களிடம் இருந்து தனிமைப்ப்படுத்துவதும், மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து விகல்ப்ப எண்ணங்களை விதைத்து வெறுப்புணர்வை உண்டாக்கி அதன்மூலம் முஸ்லிம்களை வேரருக்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும் ஆபத்தான காலகட்டத்தை முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருப்பதே இன்றைய முஸ்லிம்களுக்கான பெரும் பிரச்சனை.

இத்தகைய காலகட்டத்தில் இப்படியான படம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கதையாகிவிடாமல் இருக்கவே இந்த மாபெரும் எதிர்ப்பும் கண்டனங்களும் போராட்டங்களும்...

இந்த போராட்டங்களை மேலோட்டமாக பார்த்து முஸ்லிம்கள் என்றாலே வெறும் போராட்டக்காரர்கள் தானா என எண்ணம் கொள்ளாமல் அவர்களது மனநிலையையும் புரிந்து  அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் சகோதரர்களே!

சரியான காரணம் இன்றி இப்படியான போராட்டங்களை முஸ்லிம்கள் கையில் எடுக்க மாட்டார்கள். மாற்றுமத சகோதரர்கள், கமல்ஹாசனை பெரும் கலைஞனாக பார்க்கக்கூடியவர்கள், பெரும் முயற்சிக்கு முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக எண்ணி வேற்றுமை கொள்ளவேண்டாம்.

எந்தக்காரணம் DAM 999 திரைப்படம் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டதோ, அதே அளவுகோலை இந்த திரைப்படத்திற்கும் கொடுத்து ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
ரஜின்

செவ்வாய், ஜனவரி 01, 2013

வன்புணர்வும், கடும் தண்டனைகளும்!!!

7 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

சமீபத்தில் நடந்த கொடும் வன்புணர்வும் ,அதை கடந்த மரணமும் நமக்கு பல செய்திகளை சிந்திக்க கொடுத்துவிட்டு நம்மைக்கடந்திருக்கிறது.

குற்றம் என்ற ஒன்று நடக்கும் போது அதற்க்காக கொடுக்கப்படும் தண்டனை மூன்று காரியங்களை பூர்த்தி செய்ய கடமைப்பட்டிருக்கிறது. ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு நீதி, இரண்டு குற்றவாளிக்கு தண்டனை மூன்று சமுதாயத்தில் இருக்கும் சமூகவிரோதிகளுக்கு எச்சரிக்கையும், மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும்.


இந்த மூன்றையும் இன்றைய சட்டதிட்டங்கள் பூர்த்தி செய்கிறதா என்றால்? மௌனம் மட்டுமே பதிலாகிறது. இவை பூர்த்தி செய்வதில்லை. ஒரு சட்டம், ஒரு குற்றத்திற்கான தண்டனை இம்மூன்றையும் பூர்த்தி செய்ய வேண்டுமாயின் அது முதலில் குற்றத்தின் தீவிரத்தையும், பாதிக்கப்பட்டவரின் வேதனையையும், பாதிப்பையும், சமூகத்தில் அதன் தீய பங்களிப்பையும் உள்வாங்கி இருக்கவேண்டும்.


இந்த வன்புணர்வு குற்றத்தை கருவாகக்கொண்டு விவாதிப்போமானால், வன்புணர்வு என்பது என்ன? சமூகத்தில் சரிபங்காக இருக்கும் பெண்களின் மீது ஆண் நிகழ்த்தும் உச்சகட்ட மனித உரிமை மீறல். இதைத்தாண்டி உயிர்பறிப்பு என்பது பறித்தவனை மனிதத்தன்மையில் இருந்தே அகற்றிவிடக்கூடிய கடுங்குற்றம்.

வியாழன், அக்டோபர் 25, 2012

தியாகத்திருநாளும், சிந்திக்க சில வசனங்களும்...

3 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவரையும் சிறிய இடைவெளிக்கு பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்..



மறுமை குறித்து சிந்திக்க சில குர்ஆன் வசனங்கள்:

விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்தார்களே அத்தகையோர்களை பூமியில் குழப்பம் செய்கின்றவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடையோர்களை குற்றம் புரியும் பாவிகளைப்போல் ஆக்கிவிடுவோமா? - 38:28

தீமையை சம்பாதித்துக்கொண்டார்களே அத்தகையோர்-விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்தார்களே அத்தகையோரைப்போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும் மரணித்து விடுவதும் சமமே.அவர்கள் (இதற்கு மாறாக) தீர்ப்பு செய்துகொண்டது மிகக்கெட்டதாகிவிட்டது.

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக்கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான்.இன்னும் ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்) அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள். 45-21 22

நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப்படைத்து இன்னும் அவைகளைப் படைத்ததால் சோர்வடையவில்லையே, அத்தகைய அல்லாஹ் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆம்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். 46:33

அவன் எத்தகையவனென்றால் படைப்பை முன்மாதிரியின்றியே ஆரம்பமாக அவன் தொடங்குகின்றான்,பின்னர் அதை அவன் மீளவைக்கிறான்.இது அவனுக்கு மிக எளிமையானதாகும்.வானங்களிலும் பூமியிலும் மிக்க மேலான வர்ணனைப்பண்பு அவனுக்குரியதே. மேலும் அவன் யாவற்றையும் மிகைத்தவன் தீர்க்கமான அறிவுடையவன்.30- 27

நபியே! எழுதப்பட்ட (பெரும்) ஏடுகள் சுருட்டப்படுவதைப்போல நாம் வானத்தை சுருட்டிவிடும் நாளை (நினைவுகூறுவீறாக) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும் ) மீளவைப்போம்.(இது) நம்மீது கட்டாயமான வாக்குறுதியாகும்.நிச்சயமாக நாம் இதைச் செய்வோராக இருக்கிறோம். 21: 104

(படைப்புகள் யாவற்றையும்) முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகிவிட்டோமா? அவ்வாறன்று! (இறந்தபின் உயிர்கொடுத்து நாம்) புதிதாக படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்திலிருக்கினர். 50:15

மூலம் : அல்குர்ஆன்

அன்புடன்
ரஜின்




புதன், ஜூன் 06, 2012

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!! - 03

7 கருத்துகள் :


என் தந்தையின் சந்திப்பு எனக்கு மிக ஆதரவாக இருந்தது, என் உறவினார்களும், என் நன்பர்களும்  இவ்வாறு எனது கப்ருக்கு (வந்து எனக்காக பிரார்த்தித்து) செல்வதை ஆசைப்பட்டேன்.
மேலும் '' என் தந்தையே என் பொறுப்பில் உள்ள என் கடனை செலுத்துவீர்களா! எனக்காக அந்த கடன் தொகையை தருமம் செய்து விடுவீர்களா! எனக்காக பிரார்த்தனை செய்வீர்களா! என நான் குமுருகின்ற குரலை என் தந்தை செவியுறமாட்டார்களா! என ஆசித்தேன் இருப்பினும் என் குரலை செவியுற எவ்வித வழியும் இல்லை என்பதைக் குறிக்கின்ற இறை வசனம்  وَحِيْلَ بَيْنَهٌمْ  وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ அவர்களுக்கும் அவர்களால் விரும்பப்படுகின்றவைகளுக்கு மத்தியில் திரையிடப்படும் ( அல் குர்ஆன் 34:54) என்ற அல்லாஹ்வின் வசனம் நினைவிற்கு வந்து விட்டது.
என் உடல் உஷ்ணம் சற்று குறைவதாகவும் சற்று கூடுவதாகவும் உணர்ந்தேன் , இதற்கும் எனது தந்தையின் சந்திப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்று கூட எண்ணினேன் ஆனால் அதுவல்ல, விஷயம் வேறாக இருந்தது

அது : திடீரென அறிமுகமான வெளிச்சம் ஒன்று வந்தது அதுதான் சூரா அல் முல்க்
அது (சூரா அல் முல்க்) என்னிடம் உனக்காக இரு நற்செய்திகள் உள்ளன என்றது
நான் : அதுவென்ன ? சீக்கிரம்; சொல் என்றேன்
சூரா அல் முல்க் : முதலாவது : உனது 10000 ரூபாய்க்குரியவருக்கு நீ தரவேண்டிய கடன் ஞாபகம் வந்துவிட்டது இருப்பினும் அல்லாஹ்விடமிருந்து நன்மையை எதிர்பார்த்தவராக நான் அவரிடமிருந்து பெற வேண்டிய கடனை விட்டுக் கொடுத்து விட்டேன், உன் குடும்பத்தினரிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!!! - 02

கருத்துகள் இல்லை :


பின்னர் அவ்விருவரும் : நீ சுவர்க்க வாசியாக இருந்தால், கூடவே நாங்களும் இருப்போம், எங்களை நீ பார்ப்பீர்,
நான்: நான் பார்த்தும் செவியுற்றும் இன்னுமா நான் சுவர்க்கத்தில் நுழைவதில் சந்தேகம் உள்ளது என்றேன்
அவ்விருவர் : நீ சுவர்க்கத்தில் நுழைவது என்பது பற்றி அல்லாஹ் மாத்திரமே அதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறான், இம்மரியாதை நீ முஸ்லிமாக மரணித்ததன் காரணமாகத்தான் இன்னும் உன்னுடைய அமல்கள் மற்றும் தராசுப் போன்றவைகள் சமர்க்கிப்பட வேண்டியிருக்கிறது  என்றவுடன் என் முகம் மாறி அழ ஆரம்பித்து விட்டேன் ஏனெனில் மலை போல் உள்ள பாவங்கள் என் ஞாபகத்தில் வர ஆரம்பித்து விட்டன.

அவ்விருவர் என்னிடம் : அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள் மேலும் உன் ரப் எவர் மீதும் அநீதியிழைக்கமாட்டான் என நம்பு என சொல்லி விட்டு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்லியவாறு மேலே உயர்ந்து விட்டனர்.
நான் எனது உடலை நீட்டிவிடபட்ட நிலையில் பார்த்தேன், எனது முகத்தை என் பார்வைகள் உயர்ந்த நிலையில் பார்த்தேன், பின்னர் அழும் சப்தத்தை செவியுற்று திசை திரும்பினேன் : அது என் அன்பு மகனின் ஓசை, அவனுடன் என் தம்பியும் இருக்கிறார்,
சுப்ஹானல்லாஹ் : நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்என் உடலைப்பார்க்கிறேன், அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது உடனே நான் குளிப்பாட்டப்படுவதாக அறிந்து கொண்டேன், அழும் சப்தம் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, மிகவும் நெருக்கடி கடுமையாகி விட்டது இருப்பினும் ''அல்லாஹ் உன் இடத்தை நிரப்புவானாக! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! என என் தந்தை சொன்னது  என் மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றியது போல இருந்தது பின்னர் என் உடலை வெள்ளைத் துணியால் சுருட்டினார்கள்.

Counter

பிற பதிவுகள்