வியாழன், செப்டம்பர் 03, 2009

மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்!

நீதிமன்றில்....

நீதிபதிகள் பார்த்திருக்க... அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்... ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....? இது ஒன்றும் கற்காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக ஜூலை 01 - 2009 அன்று, ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "கொடுமை''தான் இது. "மர்வா அல் ஷெர்பினி' எனும் 31 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான். துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் (மதவெறியன்) ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும். தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ (சுமார் 55000 ருபாய்)பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை..அந்த கொடூரன் பதினெட்டு முறை ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொல்லும் வரை,அத்துனை பாதுகாப்பு மிக்க நீதி மன்ற வளாகத்தில்,அங்கு இருந்த காவலர்களும், மற்றவர்களும்,என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தான்.

ஒருவேளை அவர்களும் தமிழ்நாடு போலிஸ் போலத்தானோ என்னவோ,எல்லாம் முடிந்த பின்பு "யு ஆர் அண்டர் அரஸ்ட்" என்று வருவார்களே,அது போல...

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது."தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினி"யின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன.

இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர. அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் பைத்தியகாரத்தனமான வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்ற கொடூரர்களை உருவாக்குகின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம். உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா? ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன? ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

உலகம் இருக்கட்டும்,உள்ளுரில் இருக்கும்,நமது பத்திரிக்கைகளும்,வாய் திறக்கவில்லை..

அது தவிர ,எது எடுத்தாலும் ,இஸ்லாத்தை குறை கூற,ஹிஜாபை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும்,நமது நாட்டின் (இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்) நடுநிலையாளர்களும்,ஏனோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை ...கேட்டால் இந்த செய்தி தங்களுக்கு தெரியவே தெரியாது என்பார்கள் ...

இஸ்லாமியர்களை தவிர உலகில் உள்ள அனைவரும்,அந்த பெண்களின் ஆடையை (கண்ணியத்தை) களைந்து விடலாம் என்றே முயற்ச்சிக்கிறார்கள்.....

ம்ம் .... அந்த ஒரு அற்ப முயற்சிக்கு கிடைத்த தோல்வியே,இந்த பெண்ணின் மரணம்...இதுவே, மேற்குலகில்,பிற மத பெண்களுக்கு நடந்து இருந்தால்.....

அந்த அர்ப்பனுக்கு ஊடகங்களே அல்லவா தண்டனை பெற்று கொடுத்து இருக்கும்,அந்த பெண்ணையும்,மானம் காக்க உயிர் துறந்த உத்தமி ,என பலவாறாக ஏற்றி போற்றி இருக்கும்,,,

என்னசெய்வது .....பாவம் அவர்களை இஸ்லாமோபோபியா அல்லவா தொற்றிக்கொண்டுள்ளது .....அவர்களால் வாய் திறக்க முடியாது தானே....

வேண்டுமென்றால் அவர்கள் இப்படி சொல்லுவார்கள்..."பார்த்தீர்களா? இஸ்லாமியர்களின் இந்த ஹிஜாப் முறை ஒரு பெண்ணின் உயிரை குடித்துவிட்டது",என்று கூறி,மேலும் அதற்கு எதிரான கோஷங்களை எழுப்புவார்கள்...

இன்னும் தமிழர்களால் ,நடத்தப்படும் ,வலைபூகளில் கூட இஸ்லாத்தை விட்டு வைக்க மாட்டார்கள்..அதுவும்,ஒரு செய்தியை பற்றி விவாதிக்கும் போது,அது இஸ்லாம் சம்பந்தமற்றதாக இருந்தாலும்,இஸ்லாத்தை இழுத்து,இழிவு செய்வார்கள்....நான் கண்டவை...அதில் அவர்கள் தங்களை நடுநிலையாளராக காட்டிக்கொள்வார்கள் ..

இஸ்லாம் பெண்களை அடிமை படுத்துகிறது ,என்றெல்லாம் கதைப்பார்கள் ....அப்படி அடிமைபடுத்தினால்,.....கட்டாயத்தில் ஹிஜாப் அணியும் பெண்கள் யாரும்,இப்படி உயிரை தர மாட்டார்கள் ...

இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அவர்களை ஷகீதுகளுடன் நாளை மறுமையில் ஆக்கிவைப்பானாக...

இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்த போதுமானவன்....

இஸ்லாமிய பெண்கள் அனைவரும் இறை கட்டளையை ஏற்று,அதன் மஹத்துவம் அறிந்தே அணிகிறார்கள் ...

இஸ்லாத்தில் எதுவும்,கட்டாயம் கிடையாது.....இது இஸ்லாத்தில் உள்ளவர்களைவிட மாற்று மதத்தவருக்கு,நன்றாகவே தெரியும்...

இதற்கு சாட்சி ,இஸ்லாத்தில் இருக்கும் பல பெண்களும் இன்று ஹிஜாப் அணியாமல் வெளிவருவதே.....

அவர்களுக்கான,வரவு செலவை,இன்ஷா அல்லாஹ், வல்ல இறைவன் பார்த்து கொள்வான்...

மேற்குலகு,முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த ஒரு சார்பு நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் போர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

பிரார்த்தனைகளுடன்......

ரஜின் அப்துல் ரஹ்மான்.

1 கருத்து :

  1. பெயரில்லா2/2/11 11:03 PM

    வணக்கம்
    இதைப்போலவே யேர்மன் தேசத்தில் நடந்நது ஒரு துருக்கி சகோதரி யேர்மன் சகோதரனை நேசித்தபடியால் சொந்த சகோதரனால் சகோதரி கொலை செய்யப்பட்டார் இதுவும் மத வெறியால் நடந்தது

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்