வியாழன், ஏப்ரல் 22, 2010

ஜின்னா பற்றி,ஒரு ஹிந்துவின் கருத்து

இந்தியாவில் மிகவும் அறியப்பட்டவரான,பா ஜா கவின்,முக்கிய பிரமுகருமாக இருந்த முன்னால் ராணுவ அதிகாரி ஜஸ்வந்த் சிங்,முஹம்மது அலி ஜின்னா பற்றி குறிப்பிட்டவை இங்கே...
சரி இப்போது ஜின்னாவை பற்றி பேசவேண்டிய அவசியம் என்னவென்று தோன்றலாம்.அவருக்கு வக்காலத்து வாங்க இந்தப்பதிவல்ல
இது எனது முந்தைய பதிவில் சகோ விருச்சம் அவர்கள் ஜின்னா பற்றி செய்த விமர்சனத்துக்கு விளக்கமாகவும் அமையும்.
அத்துடன் ஒரு விஷயத்தில் நாம் கொண்ட வேறுபட்ட எண்ணத்தில் தெளிவும் பிறக்க ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்ற எண்ணத்திலே இதை பதிகிறேன்,,,,,,,,,
ஜஸ்வந்த் சிங்'கின் கருத்துடன் ஜின்னா விவகாரத்தில் எனது கருத்தும் ஒன்றி நிற்கிறது...
கரன் தாப்பர் பேட்டி விவரம்: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்த பேட்டியின் சில பகுதிகள்... ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை. அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார். ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.
ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன். அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா. அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே. மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார். ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன். இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது. 1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார். முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது. நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.
முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.
இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன். எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே. மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார். சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார். அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது. இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''. அங்கேயே பிரிவினை வந்து விட்டது. ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர். ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது. ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர். இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்களே...
- ஜஸ்வந்த் சிங்
இதை ஒரு முஸ்லிமான நான் சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மனம் வராது.இந்திய முஸ்லிம்களே இப்படித்தான்,பாவி இந்தியாவை கூறுபோட்டவனை கொண்டாடுகிறார்கள் என சொல்வார்கள்.எனவே தான் ஒரு ஹிந்துவான ஜஸ்வந்த் அவர்களின் கருத்தை முன்வைக்கிறேன்.அவரது கருத்துக்கு வழிமொழிகிறேன்,,,,
நன்றி
அன்புடன்
ரஜின்.

1 கருத்து :

  1. பிரிவினையை விரும்பாதவர் எப்படி தனி நாடு உருவாக்கினார்? உள்ளே இருந்து போராடி இருக்க வேண்டாமா? சரி. பிரிந்து போன பின் ஜனநாயக நாடாக பாகிஸ்தானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா ? முஸ்லிம் அல்லாதோர் எத்தனை பேர் அவர் அரசவையில் பொறுப்பில் இருந்தார்கள் ? கடுமையான நோயில் பாதிக்கப்பட்டு இருந்த வயதான காலத்தில் அரைகுறையாக ஒரு நாட்டை உருவாக்கிவிட்டு போய் விட்டார் என்று சொன்னால் தவறாகுமா?
    அவருக்கு பின் பொறுப்பு ஏற்றவர்கள் இவரின் கொள்கைகளை ஏன் கடைபிடிக்கவில்லை ? இது இந்தியாவில் அந்த கட்சியின் மேல் நம்பிக்கை குறைந்து இருந்ததற்கான காரணத்தை விளக்கி விடும்.
    அங்குள்ள பிற மதத்தவரின் நிலை என்ன ? பாகிஸ்தானின் நிலை தான் என்ன ? தனியாக பிரிந்து சென்று அவர்கள் சாதித்தது என்ன? இங்குள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அங்கு இருக்கிறதா ?
    இந்தியா இன்னும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவின் மேல் விழும் தீவிரவாத அடிகளை நடத்துபவர்கள் யார்? இதை இந்தியா இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் ஒற்றுமை கூடினால் சிறப்பாக சமாளிக்க இயலும்.

    நாம் வார்த்தைக்கு வார்த்தை விளக்க முற்பட்டால் ஒரு பொது கருத்துக்கு வருவது இயலாது. உங்கள் வேதனை புரியாமல் இல்லை. இந்துக்களை கைகாட்டி அதை சரி செய்ய இயலாது என்பதே என் கருத்து.
    வெளியில் இருந்து வரும் முஸ்லிம் தீவிரவாதம், உள்ளே இருந்து எழும் முஸ்லிம் தீவிரவாதம், சின்ன சின்ன விஷயங்களுக்கு (தஸ்லீமா பர்தா ) மாதிரி விஷயங்களுக்கு சம்பந்தம் இல்லாத தெருக்களில் வன்முறை, இப்படி நடக்கும் போது எதிர்த்து குரல் கொடுத்தாலே பல நன்மைகள் விளையும். முஸ்லிம்கள் பாதிக்கப் படும் போது பேச இங்கு நிறைய மக்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் பாதிக்கப் படும் போது ஆதங்கப் பட்டால் கூட இந்துத்துவா முத்திரை குத்தப் படுகிறது.
    My name is Khan படம் வெளி வந்த போது மும்பை போலிசே மொத்தமாக காவல் நின்றது ? எதனை பேர் தீவிரவாதம் என்றால் எல்லா தரப்பு மக்களுமே தானே பாதிக்கப் படுகிறார்கள் . ஏன் common man in muslim ஐ மையமாக வைத்து மட்டும் படம் எடுத்தீர்கள் என்று கேட்டு இருப்பார்கள்? நீங்கள் கேட்டீர்களா ? பாதிப்பு என்று வரும் போது பொதுமக்களுக்காக பேச வேண்டாமா ? அது என்ன muslim common man?

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்