ஞாயிறு, அக்டோபர் 31, 2010

ஹிந்து மதம் - சில கேள்விகள்

ஒரு சகோதரரின் தளத்தில் நடந்த பின்னூட்ட கலந்துரையாடலில்,இஸ்லாம் மற்றும் ஹிந்துமதத்தின் வரையறைகளை பற்றி விவாதித்தோம்.



அப்போது எனக்கு ஹிந்துமதத்தின் வரையறை பற்றி எழும்பிய சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன்..பதில் இல்லை.எனவே அந்த கேள்விகளை பொதுவில் வைத்தால்,விருப்பம் உள்ள ஹிந்து சகோதரர்கள் பதில் தர ஏதுவாகுமே என அவற்றை இங்கே பதிக்கிறேன்...


உலகில் உள்ள எந்த மதமாகட்டும்,அல்லது இஸங்கள் ஆகட்டும்,சில கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது,அந்த கொளகையில் பிடிப்பு உள்ளவர் அந்த குறிப்பிட்ட மதத்தையோ,அல்லது அந்தந்த இஸங்களையோ சார்ந்தவராவார்.


இஸ்லாமும் ஒரு இஸ்லாமியனுக்கு சில அடிப்படைகளை வகுத்துள்ளது.அதை பின்பற்றுபவன் ஒரு அடிப்படை முஸ்லீம் என்ற தகுதியை பெறுகிறான்.அவனது மோட்ஷம் என்பது அவன் இஸ்லாத்தை அடிபிறழாமல் கடைப்பிடித்து,இறைப்பொருத்தம் அடைவதில் தான் இருக்கிறது.


ஒரு அடிப்படை முஸ்லீமாக இருப்பவன்,மோட்ஷம் அடைந்த முஸ்லீமின் தகுதியை எக்காலும் அடைய முடியாது,

எனவே ஒரு முஸ்லீமாக,இறைவனின் திருப்பொருத்தத்தை பெற,இஸ்லாம் வகுத்த வழியில் செல்வதே,அதை அடைய போதுமான நேரான வழியாக இருக்குமென்பது தெளிவு.அதுதான் சரியும் கூட.

சரி ஹிந்து மதத்தை பொருத்தவரை இவ்வாறு சொல்லப்படுகிறது....

//ஒருமதத்தில் இலக்கு மட்டுமே முக்கியம்,இலக்கை அடைய பல வழிகள் இருக்கின்றன,உனக்கு எது சரிப்படுகிறதோ அந்த வழியில் போகலாம்,எதுவும் சரிப்படவில்லை என்றால் நீயே ஒரு பாதையை உருவாக்கலாம் என்று சொல்கிறது//

இது எனக்கு ஏற்புடையதாக,மற்றும் சரியான வழிகாட்டுதலாகவும் தெரியவில்லை

.ஹிந்து மதத்தில் கொள்கைகள்,கோட்பாடுகள் என்பன உண்டுதானே.பல வழிகள் உண்டு,எது வேண்டுமானாலும் எடுத்துக்கலாம்.ஏதும் புடிக்கலைனா நீயே ஒரு வழியில் போகலாம்.அப்டீன்னா? ஒன்னும் புரியல...ஹிந்துமதத்தின் வரையறைதான் என்ன???

ஹிந்து மதம் சில வேதங்களை,சில புராண இதிகாசங்களை கொண்டுள்ளது.அவற்றை பின்பற்றி வாழ்பவன்,ஒரு சிறந்த ஹிந்து எனலாம்.அவை எதிலும் எனக்கு உடன்பாடில்லை,எனச்சொல்வதும் ஹிந்துமதம் என்றால்??? உங்கள் வரையறையில் முஸ்லீமான நானும் ஒரு ஹிந்துவா????

ஒரு நாத்தீகன் தனது மதத்தை பழிக்க,ஹிந்துமதம் அனுமதிக்கிறது என சொல்கிறீர்கள். ஒருவன்,தன்னை பழிப்பதை பொருத்துக் கொள்வதை சகிப்புத்தன்மை என Brand செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.அப்படி அதை கண்டும் காணாதிருந்தால்,ஒன்று அவ்விமர்சனம் சரியானதாக இருக்க வேண்டும்,அல்லது அவ்விமர்சனத்துக்கான விடை தெரியாமல் இருக்க வேண்டும்.

ஹிந்து மதம் தன்னை காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது என பரவலாக சொல்லப்படுகிறது,

அப்படிப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இது போன்ற நாத்தீகர்கள் மற்றும் ஹிந்து மதத்தை ஏற்காதவர்கள் எழுப்பிய கேள்விகளால் தானே உண்டானது.

இவர்கள் யாவரும் ஹிந்துமதத்தை பின்பற்றாதவர்கள்,ஹிந்து மத கடவுள்களை புறக்கணிப்பவர்கள்,இவர்களின் பொருட்டு ஹிந்துமதம் மாற்றங்களை வலிந்து ஏற்றது என்றே சொல்ல முடியும்.

ஏனெனில் தற்காலத்தில் இல்லாத,கடந்த நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்த மூடபழக்கங்கள் யாவும் நாமறிந்து,எந்த ஹிந்துமத ஆச்சாரியார்களாலும் களையப்படவில்லை.

ஏதும் இருந்தால் சொல்லலாம்.விவேகானந்தர் கூட,பல்வேறு தத்துவங்களை சொன்னாரே ஒழிய,அவரது காலத்தில் கடுமையாக பின்பற்றப்பட்ட எந்த ஒரு மூட நம்பிக்கையும், அவரைக் கொண்டு அழிக்கப்பட்டதாக தெரியவில்லை.

சாதி ஒழிப்பாகட்டும்,தீண்டாமையாகட்டும்,'சதி'யாகட்டும்,பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளாகட்டும்,இத்துனையும் தகற்தெரியப்பட்டது,அம்பேத்கார்,பெரியார்,இன்னும் பல நாத்தீகர்கள்,மற்றும் ஹிந்துமதத்தை ஏற்காத ஹிந்துக்களால் தானே.

எனவே இப்படிப்பட்ட உன்னதமான மாற்றங்களை தன்னுள் ஏற்கும்??மதமானது,அந்த மாற்றங்களுக்கான காரணகர்த்தாக்களை புறந்தள்ளுகிறது.அவர்களை புறக்கணிக்கிறது.அவர்களுக்கு ஹிந்துமத வளர்ச்சியில் இடமளிக்க மறுக்கிறது.


உதாரணமாக இன்றைக்கு தமிழகத்தில் பெரும்பான்மை ஹிந்துக்கள் சாதிகொடுமைகளில் இருந்து மீள காரணமான தந்தை பெரியாரை,ஹிந்துமதம் தனது வளர்ச்சியின் படிக்கட்டாக கருதுவதில்லை.ஆனால் அவரின் மூலம் வந்த வளர்ச்சியை மட்டும்,தான் ஏற்றதாக சொல்லிக்கொள்வது...மாற்றத்தை ஏற்றதாக இல்லை.ஏற்க வைக்கப்பட்டதாகவே தெரிகிறது.

சரி அடுத்தது -- யாரும் எப்படியும் வாழ்ந்து கொள்ளலாம் என்பது என்னமாதிரியான் கோட்பாடு?என விளங்கவில்லை.அப்படி சொல்வதாக இருந்தால்,ஏன் வேதங்கள்,புராண இதிகாசங்கள்,அவை எதை சொல்ல நிற்கின்றன?

இது எப்படி இருக்கிறதென்றால்.ஒரு ஞானி,தனது சிஷ்யர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற நெறியை,ஒரு சில பத்து கொள்கைகளாக சொல்லிவிட்டு.11வதாக,இதை பின்பற்றாவிட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லை,நீ ஈடேற்றம் பெருவாய் என சொன்னால்.

சிஷ்யர்களில்,ஒருவர் முழுமையாக அக்கொள்கைகளை,பின்பற்றி வாழ்ந்தும்,மற்றொருவர், அதை முற்றாக கடைபிடிக்காமலும்,இன்னொருவர்,அதை சதா விமர்சித்தும்,பழித்தும், இருந்து.பின்னர் அம்மூவரும் மரணிக்க,அந்த ஞானி அம்முவரையும்,ஒரே மாதிரியாக பார்ப்பாரேயானால்…ஒன்று இதில் நடுநிலை இலாது போகிறது.இல்லை…நான் கொடுத்த கொள்கைகளுக்கு,எந்த மதிப்பும் இல்லை என அவரே ஏற்றுக் கொள்கிறார்.

இங்கு ஞானிக்கு பதில் கடவுளையும்,கொள்கைக்கு பதில் ஹிந்து மதத்தையும் பொருத்தி பாருங்கள்.ஏற்புடையதாக இல்லை..

அது தவிர்த்து,//எதுவும் சரிப்படவில்லை என்றால் நீயே ஒரு பாதையை உருவாக்கலாம் என்று சொல்லப்படுகிறது//

இது மிகுந்த முறன்பாட்டை தருகிறது.தானே தனக்கான வழியை ஏற்படுத்திக் கொள்வதும் ஹிந்து தர்மம் என்றால்.போலிச்சாமியார்களும்,சில ஏமாற்று பேர்வழிகளும்,ஹிந்துக்களின் கோபத்திற்கு ஆளாவது ஏன்??.அவர்கள்,ஹிந்துமதம் அனுமதித்தற்கிணங்க,ஏதும் பிடிக்காததால்,தானே ஒரு வழியை தனக்காக்கி கொண்டனர்.இதுவும் ஹிந்துமதம் அனுமதித்ததுதானே??? 

அதுவல்லாது சமூகவிரோதியும்,புல்லுருவிகளும்,இதுவே எனது பாதை என தனக்கான பாதையை நியாயப்படுத்த முயன்றால் என்ன ஆவது? நாளை எது சரி எது தவறு,என எதை கொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவது.யார் வழிகாட்டுவது?

இதுதான் ஒரு மதத்தின் வழிகாட்டலா?
குறிப்பு:
இது ஹிந்துமதம் குறித்த எனது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளேன்.விருப்பம் உள்ளவர்கள் பதில் தரலாம்..இப்பதிவில் இஸ்லாம் பேசு பொருள் அல்ல.நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கா என எதிர் கேள்வி,இப்போது தேவையற்றது.அதில் கண்ணியமான கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் தரப்படும்.குறிப்பாக ஹிந்துமதம் குறித்த எனது கேள்விகளுக்கு, அத்வைதம்,அத்வேஷ்டா,யதாத்மா..என சமஸ்கிருத விளக்கம் தராமல்,எளிய மனிதன் புரியும் படி விளக்கினால் நல்லது.
கண்ணியமான பின்னூட்ட விவாதம் வரவேற்கப்படுகிறது.
நன்றி.
அன்புடன் 
ரஜின்

28 கருத்துகள் :

  1. பெயரில்லா1/11/10 5:43 AM

    அய்யா.. நான் வேதத்திலிருந்து எல்லாம் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அதெல்லாம் அறிந்திராதவர். இருந்தாலும், தர்க்க ரீதியாக சொல்லிவிட்டுப் போகிறேன். அதாவது, யாரோ எழுதி வைத்த விதிமுறைகளை பின்பற்றத் தேவையில்லை. நீ உனக்காக யோசித்து உன் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடு என்பதாகத் தான் என் பார்வையில் அந்த பத்தி புரிபடுகிறது. இலக்கு என்பது கடவுளாக இருக்கும் பட்சத்தில், நான் பூஜை செய்தோ தொழுகை செய்தோ இல்லை பிற உயிர்களுக்கு உதவியோ - எப்படி வேண்டுமானாலும் இறையை வழிபடலாம் என்று சொல்வதாகப் படுகிறது. எனக்கு இதில் தவறாக எதுவும் படவில்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சகோ அனானி அவர்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.வேதங்கள் என்பவை யாரோ எழுதிவைத்தவை அல்ல..உங்களது மதம்,மற்றும் வேதம் குறித்த புரிதல் அவ்வளவாக இருப்பது கவலை அளிக்கிறது.வேதங்களே.ஹிந்து மதத்தின் அடித்தளம்.அதை யாரோ எழுதிய கதைகள் போல வருணிப்பது,ஹிந்துக்களின் வேதம் மற்றும் மதம் குறித்த மனநிலையை தெளிவுபடுத்துகிறது.

    இது ஒரு புறம்,நியாயமானதும் கூட.ஏனென்றால்....எது வேதமோ,அது அவர்களது கண்களில் கூட காட்டப்ப்ட வில்லை..வேதமில்லாத கதைகளை மட்டுமே பார்த்து பழகியவர்கள் இப்படி பேசுவது இயல்பே.

    நன்றி.
    -------------
    சகோ ஃபாத்திமா,அவர்களே.
    வருகைக்கும்,வாசிப்புக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11/11/10 3:26 AM

    அய்யா.. நான் அதே அனானி. வாழ்க்கைக்கு தேவை, அறமும் அன்புமே, அவைகளைக் கற்று பிற உயிர்கட்கு தீங்களிக்காமல் வாழ்வதே இறைவனுக்கு செய்யும் தொண்டு எனக் கருதுபவர். மதம் குறித்த புரிதலில் விருப்பமில்லை. மதச் சடங்குகளும் செய்வதில்லை. என்னளவில் நான் சந்தோஷமாகவே வாழ்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவர்களும். கவலை வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  4. பொறுமையாக, பக்குவமாக, அறிந்துகொள்ளவேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள்.

    நன்றி..

    மற்ற மதங்கள் , கலாச்சாரங்களில் இருந்து வேறுபடுத்திக்காட்ட தற்காலத்தில் பயன்படும் சொல் தான் ஹிந்து மதம்.

    பல பெரியவர்கள் இந்த கலாச்சாரம் பற்றி விளக்கி இருக்கிறார்கள்.. இணையத்தில் கிடைக்கின்றது..

    எதோ என்னால் முடிந்த அளவுக்கு சுருக்கி சொல்கிறேன்..
    இது ஒரு Platform for your spiritual search. மதம் அன்று .

    மதுரையில் இருந்து சென்னைக்கு SETC பஸ் ஐ பிடித்தால் மட்டும் தான் போக முடியும் என்று சொல்வது மதம்..
    இதுவரை மக்கள் எப்படி எல்லாம் சென்று இருக்கிறார்கள் (பஸ், ரயில் , திருட்டு ரயில், குதிரை, மாட்டு வண்டி, லாரி, நடை பயணம், கார், Flight) , அதில் எப்படி பட்ட அனுபவம் ஏற்பட்டது என்று மக்களே சொல்லும் தளம் தான் இந்த Platform.

    ஏதாவது ஒருவர் சென்ற பாதையை பின்பற்றி செல்லலாம்.. நீங்கள் விரும்பினால் நீங்களாக புது வழியில் செல்லலாம்... கவனமாக, பாதுகாப்பாக, அறவழியில் பயணிப்பதே சேரவேண்டிய இடம் கொண்டு போய் சேர்க்கும்

    பதிலளிநீக்கு
  5. ////ஒருமதத்தில் இலக்கு மட்டுமே முக்கியம்,இலக்கை அடைய பல வழிகள் இருக்கின்றன,உனக்கு எது சரிப்படுகிறதோ அந்த வழியில் போகலாம்,எதுவும் சரிப்படவில்லை என்றால் நீயே ஒரு பாதையை உருவாக்கலாம் என்று சொல்கிறது//

    இது எனக்கு ஏற்புடையதாக,மற்றும் சரியான வழிகாட்டுதலாகவும் தெரியவில்லை
    //

    நீங்க படிச்சா பெரிய அல்லது சிறிய டாக்டர் ஆவிங்க இந்தாங்க சிலபஸ், பாடம் இதைத்தவிர உங்களுக்கு வாய்பில்லை, படிக்கவில்லை என்றால் படிக்காத தற்குறியாக கூலி வேலை செய்து கஷ்டப்படவேண்டியது தான் என்பது மட்டுமே சரி என்கிறீர்கள்.

    இது ஒரு பல்கலைகழகம் நீங்க உங்க விருப்பப்படி பாடங்களை தேர்ந்தெடுக்கலாம், இதில் எதுவும் சரி இல்லை என்றால் உங்கள் திறமை மூலம் சொந்தத் தொழிலைக் கூட செய்யலாம், உங்க வாழ்க்கை எது நல்லது என்பதை நீங்க தான் முடிவு செய்யனும் என்று சொல்வது எனக்கு மருத்துவர் மட்டுமே ஆவதைவிட சிறந்த வாய்ப்புகள் அறிவுறுத்தலாகத்தான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. //அதுவல்லாது சமூகவிரோதியும்,புல்லுருவிகளும்,இதுவே எனது பாதை என தனக்கான பாதையை நியாயப்படுத்த முயன்றால் என்ன ஆவது? நாளை எது சரி எது தவறு,என எதை கொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவது.யார் வழிகாட்டுவது?

    இதுதான் ஒரு மதத்தின் வழிகாட்டலா?
    //

    எல்லா மதத்திலும் வேதப்புத்தகங்கள் அழகான கருத்துரையோடு பைண்ட் செய்யப்பட்டு பளபளப்பாகத்தான் இருக்கும், ஆனால் அதைப் படிக்கிறவன் கையில் கத்தியையும், நாட்டு வெடிகுண்டையும் வைத்துக் கொண்டு எவனை போட்டுத்தள்ளலாம் என்றே அலைவார்கள். கேட்டா மதம் தவறு இல்லை, வேதப் புத்தகத்தில் வன்முறை கூடாதுன்னு தெளிவாகத்தான் சொல்லி இருக்கு பின்பற்றும் மனிதர்கள் தான் தவறு என்பார்கள். எவரையும் திருத்தாத வேத புத்தகங்கள் வெறும் அலங்கார் ஏட்டுச் சுரைக்காய் தானே அதனால் பயனேது ?

    பதிலளிநீக்கு
  7. Very clear comments by Kovi Kannan. Good way of discussing

    நீங்க படிச்சா பெரிய அல்லது சிறிய டாக்டர் ஆவிங்க இந்தாங்க சிலபஸ், பாடம் இதைத்தவிர உங்களுக்கு வாய்பில்லை, படிக்கவில்லை என்றால் படிக்காத தற்குறியாக கூலி வேலை செய்து கஷ்டப்படவேண்டியது தான் என்பது மட்டுமே சரி என்கிறீர்கள்.

    இது ஒரு பல்கலைகழகம் நீங்க உங்க விருப்பப்படி பாடங்களை தேர்ந்தெடுக்கலாம், இதில் எதுவும் சரி இல்லை என்றால் உங்கள் திறமை மூலம் சொந்தத் தொழிலைக் கூட செய்யலாம், உங்க வாழ்க்கை எது நல்லது என்பதை நீங்க தான் முடிவு செய்யனும் என்று சொல்வது எனக்கு மருத்துவர் மட்டுமே ஆவதைவிட சிறந்த வாய்ப்புகள் அறிவுறுத்தலாகத்தான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  8. இந்து மதம் என்பதே இல்லை (அது ஒரு கலச்சாரம்). ஆங்கிலேயரால் - ஏதாவது பெயரிடப்படவேண்டும் என்பதற்காக இடப்பட்ட பெயர் அது. தமிழர் கலாச்சாரம் என்கிற போது அதில் எத்தனை எத்தனை வாழ்க்கை முறைகள் உள்ளதோ அதே போலத்தான் இதுவும். இதை மதம் என்கிற குறுகிய அளவுகோளில் அளக்க முயற்சிக்ககூடாது.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா11/11/10 11:57 AM

    isalm is like a thar road, it is clear road , but if peole using more ,it will get damged,but Hindu is the like a sand reoad if pepole use more it will become the shape

    பதிலளிநீக்கு
  10. சகோ அனானி அவர்களே. தங்களது மதம் குறித்த புரிதல்,தங்களை கடவுள் நம்பிக்கை அற்றவர் போல தோற்றப்படுத்துகிறது.நான் மேலே குறிப்பிட்டுள்ள வாசகங்கள் நானே கற்பித்ததல்ல.பிரதானமாக ஹிந்துக்கள் சொல்பவற்றை முன்னிருத்தி கேள்விகளை வைத்தேன்,அவ்வளவே...வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.. ---------------------------- சகோ நியோ ஹிந்து அவர்களே. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.... ஹிந்து எனற வார்த்தை தோற்றம் பற்றி,நாமே விரிவாக "நானும் ஒரு ஹிந்து"எனும் பதிவில் அலசி இருப்போம்.பார்க்க..இந்த பேருந்து உவமைகள் ஆன்மீகத்திற்கு உகந்ததாக தெரியவில்லை.அது உங்கள் கருத்து,, அப்படி விரும்பியவர்கள் விருப்பமான வழியில் செல்லலாம் என்றால்,எனது வழியை தெர்வு செய்து முஸ்லீமாக இருக்கும் என்னையும் ஹிந்து என வழ்ங்குவீர்களா?...

    பதிலளிநீக்கு
  11. சகோ கோவிக்கண்ணன் அவர்களே.
    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி. மதம் என்பதே கடவுளையும்,அவன் மீது கொண்ட நம்பிக்கையையும் அடித்தளமாக கொண்டு கட்டமைக்கப்பட்டது, இல்லையா? அப்படி கடவுள் என்ற ஒருவர் இருக்க,அவர் மனிதனுக்கு,நன்மை தீமைகளை பற்றிய,மோட்ஷம் பற்றிய செய்திகளை சொல்லி இருப்பார் தானே,,, அதை உணர்ந்து அதன் படி வாழ்வை அமைப்பதே உத்தமமாக இருக்கும்.அதை விடுத்து,..அவரவர் இஷ்டம் போல் வாழ்வை அமைத்து இது எனக்கு மோட்ஷம் தரும் என நம்புவது பிழையே.. அதாவது..கத்திகளால்,நெஞ்சிலும் முதுகிலும் கீறிக்கொண்டு தனது பக்தியை காட்டுவதில் இருந்து,பிணத்தின் மீது அமர்ந்து தியானம் செய்து,அதையே உண்ணும் அகோரிகள் வரை மோட்ஷம் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளனர் அல்லவா?....இதை நோக்கும் போது இதையெல்லாமா கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்???அவரவர் இஷ்டம் போல் வழிகளை தேர்வு செய்ததன் விளைவாக இவற்றை நாம் காணமுடிகிறதே..நாம் நல்வழி தேர்வாளர்களை குறிப்பதை விட,வழி தவறி நடப்பவர்களை கண்ணுற்றால்.மேற்சொன்ன அவ்வாசகத்தின் விளைவு புரியும்....

    ------------------------------------------ எவரையும் திருத்தாமல் விட்டுவிடவில்லை சகோ...தாங்கள் இஸ்லாம் குறித்து பேசுவதாக உணர்கிறேன்...1900 வரை உலகில் ஜிஹாத் குறித்த எந்த ஒரு பேச்சோ,அல்லது செயல்பாடுகளோ இருந்ததாக தெரியவில்லை.உலக அளவில்,இந்தியா உட்பட முஸ்லீம்களின் நிலை என என்பதை அனைவரும் அறிவோம்..பாதிக்கப்பட்டவர்கள்,தாங்கள் கைகளில் எடுத்த ஆயுதங்களுக்கு,நியாயம் கற்பிக்க கையில் வேதங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.இதை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. அதற்காக வேதங்களை தூக்கிஎறிவது அறிவுப்பூர்வமானதும் இல்லை. இது என்னுடைய கருத்து...நன்றி ------------------------------------------

    சகோ ராஜேஷ் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி... --------------------------------------------

    சகோ ஈரோடு கோடீஸ் ஹிந்து எனற வார்த்தையின் ஆதி என்ன என்பதில் நாம் இருவரும் மாற்றுக்கருத்து கொள்ளவில்லை.ஆனால் அதன் பேரால் நாம் மேற்குறிப்பிட்ட வாசகத்தை கூறுபவர்களிடமே விளக்கத்தை அறிய விழைகிறோம்.. நன்றி....

    பதிலளிநீக்கு
  12. //சகோ கோவிக்கண்ணன் அவர்களே.
    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி. மதம் என்பதே கடவுளையும்,அவன் மீது கொண்ட நம்பிக்கையையும் அடித்தளமாக கொண்டு கட்டமைக்கப்பட்டது, இல்லையா? அப்படி கடவுள் என்ற ஒருவர் இருக்க,அவர் மனிதனுக்கு,நன்மை தீமைகளை பற்றிய,மோட்ஷம் பற்றிய செய்திகளை சொல்லி இருப்பார் தானே,,, அதை உணர்ந்து அதன் படி வாழ்வை அமைப்பதே உத்தமமாக இருக்கும்.அதை விடுத்து,..அவரவர் இஷ்டம் போல் வாழ்வை அமைத்து இது எனக்கு மோட்ஷம் தரும் என நம்புவது பிழையே.. //

    இதுல் என்ன பிழையோ ? வேதப் புத்தகம் உள்ள வேதக்காரர்கள் (பழைய புதிய ஏற்பாடு கிறித்துவர்கள்) அவர்கள் வேதமே சிறந்தது என்று அவர்கள் சொன்னால் நீங்கள் ஒத்துக் கொண்டு கிறித்துவர்கல் ஆகிவிடுவீர்களா ? உங்களைப் போல் அவர்களும் கடவுள் மதம் சொர்கம், நரகம் எல்லா கோட்பாடுகளையும் தானே கொண்டு இருக்கிறார்கள்.
    உங்கமதம் குறித்த வரையரைகளில் பவுத்த மற்றும் சமண மதம் கூட வருகிறது, அவற்றையெல்லாம் சரி என்று சொல்லிவிடுவீர்களா ?

    //அதாவது..கத்திகளால்,நெஞ்சிலும் முதுகிலும் கீறிக்கொண்டு தனது பக்தியை காட்டுவதில் இருந்து,பிணத்தின் மீது அமர்ந்து தியானம் செய்து,அதையே உண்ணும் அகோரிகள் வரை மோட்ஷம் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளனர் அல்லவா?....இதை நோக்கும் போது இதையெல்லாமா கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்???அவரவர் இஷ்டம் போல் வழிகளை தேர்வு செய்ததன் விளைவாக இவற்றை நாம் காணமுடிகிறதே..நாம் நல்வழி தேர்வாளர்களை குறிப்பதை விட,வழி தவறி நடப்பவர்களை கண்ணுற்றால்.மேற்சொன்ன அவ்வாசகத்தின் விளைவு புரியும்....// அடுத்த மதத்துக்காரனை கொல்லு சொர்கத்தில் நித்திய கன்னிகைகள் கிடைக்கும் என்பதாகத்தானே நம்பி அல்கொய்தாக்கள் இயங்குகிறார்கள், இதற்கு செத்த பிணத்தை தின்னும் அகோரிகள் அவர்களை விட மேல் அல்லவா ?

    பதிலளிநீக்கு
  13. சகோ,கண்ணன் அவர்களே.யாரும் சொன்னவுடன்,யாருடைய மதத்தையும் ஏற்கப்போவதில்லை.அவரவர் மனம் எதை ஏற்கிறதோ,அதில் அவரவர் பயணிப்பார்.நானும் அப்படியே.நான் சார்ந்துள்ள மார்க்கம் சொல்வது சரியெனப்படுவதால் இதில் நான் நிலைத்திருக்கிறேன்.

    எம்மதமாயினும்,எக்கோட்பாடாயினும்,ஓர் வரையறை அவசியம்.மனித வாழ்வுக்கும் வரையறை என்பது முக்கியமான ஒன்று.அது இல்லாத வாழ்க்கை கடிவாளம் அற்ற குதிரையின் நிலையை ஒத்தது அல்லவா?ஹிந்துமதம் அப்படி ஒன்றை குறிப்பிடவே இல்லையே.தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதுவே உன்வழி என்கிறது.

    அல்கொய்தாகாரர்கள் என்ன நோக்கத்திற்காக இயங்குகிறார்கள் என்பது எனக்கு தெரியாது.தற்போது அப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்பதும் சந்தேகமே,அது போகட்டும்.அவர்களது சுயநலத்திற்காக இஸ்லாத்தை முன்னிருத்துகிறார்கள் என்பதே என்கருத்து.

    இஸ்லாம் பிற மத மக்களை எப்படி அணுகுகிறது எனபதையே "வெறுப்புணர்ச்சி-ஜிஹாத்" எனும் பதிவில் விளக்கி இருப்பேன்.அதுவே இஸ்லாம் மக்களுக்கு அறிவுறுத்துவது.அது குறித்து இன்னும் எழுதுவேன்.தவறிய வழியில் எதைவிட எது மேலானால் என்ன?அல்கொய்தாக்கள் நம்பி இருந்தால் அதுவே உண்மையாகிவிடுமா??? இல்லையே...

    கொலை புரியும் கொடூரம் குறித்து இஸ்லாம் அத்தியாயம் 5:32 வில் குறிப்பிடுவது.அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொல்வதற்கு ஒப்பாகும்.எந்த ஒரு மனிதனையும் வாழவைப்பது,முழு மனித சமுதாயத்தையும் வாழவைப்பதற்கு ஒப்பாகும்.

    இதுவே இஸ்லாமின் நெறி.இதில் முறன்பாடுகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் ரெஜின்,

    இறைவனின் ஆற்றல் எப்படி முடிவில்லாததோ அதுபோலவே மதங்கள் குறித்த விவாதங்களும் முடிவில்லாதது.அனைத்து மதங்களும் அததற்கான நல்லவைகள்,கெட்டவைகள் இரண்டும் கலந்தே இருக்கின்றன. அதேபோல கேள்விப்பட்டு மட்டும் ஒரு விஷயத்தை மதரீதியாக உணர்வது கடினம். இஸ்லாம் பற்றி அறிய இஸ்லாமியனாக வாழ்ந்து ஆக வேண்டும்.இதே போலத்தான் பிற மதங்களை முழுமையாக அறியவும் அதன் சித்தாந்தங்கள்,தத்துவங்கள் ஆகியற்றை முழுமையாக உணரவும் அந்நிலையில் இருந்தால் மட்டுமே முடியும். இது நமக்கு சாத்தியம் இல்லை. ஆகவே ஒருவர் மற்றொருவரை நோக்கி கேள்வி எழுப்புவதைவிட ஒருவர் மற்றொருவரை மதிப்பதே சிறப்பு.இல்லையா???

    வஸ்சலாம்.

    பதிலளிநீக்கு
  15. இங்கு சிலர்,ஹிந்து என்பது மதத்தை குறிக்கும் சொல் அல்ல என்கிறார்கள்.
    கிருஸ்தவ,முஸ்லீம்,யூதர்களை தவிர்த்தே, பல்வேறுபட்ட கலாச்சாரங்கள் இந்தியாவில் இருக்கிறது.அந்த வேறுபட்ட கலாச்சார மக்களின்,மற்றும் கிருஸ்தவ,முஸ்லீம்களின், ஒற்றுமையான வாழ்வே இந்தியாவிற்கே உரித்தான "வேற்றுமையில் ஒற்றுமை" எனும் தனிச்சிறப்பு.
    எனது கருத்தும் அதுவே.இது குறித்த எனது பார்வையை"நானும் ஒரு ஹிந்து"எனும் பதிவில் விளக்கி இருப்பேன்.
    ஆனால் இக்கூற்றை ஹிந்துக்கள் ஏற்பதில்லை.சரி ஹிந்து என்றால் என்ன? என்றால்,மேற்சொன்னதை சொல்கிறார்கள்.அதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை இங்கு வைத்துள்ளேன்.
    ஏனெனில் ஹிந்து மதம்தான் இதை சொல்கிறது என்பதால் தான் இக்கேள்வி.அப்படி ஒன்றால்ல.அவரவர்,தன் கலாச்சார வாழ்வை அவரவர் விரும்பி வாழ்கிறார்கள் என்றால்.அவ்வளவுதான்,என் கேள்வி முற்றுபெறுகிறது...

    பதிலளிநீக்கு
  16. சகோ அப்துல்லாஹ் அவர்களே.வ அலைக்கும் சலாம்.

    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.தங்களது கருத்தை ஏற்கிறேன்.ஆலோசனைக்கு நன்றி.இந்த தளம் அனைத்து மதசகோதரர்களுக்கும் ஒரு விவாதக்களமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு,என்னால் இயன்ற அளவு பதில் தந்து வருகிறேன்.இஸ்லாம் மட்டுமல்லாது,மற்ற மதங்கள் குறித்த சிந்தனைகளையும் இங்கே நல்லிணக்க முறையில் விவாதிக்க முயல்கிறேன்.அதற்கும் எல்லை உண்டு..
    வரம்பு மீறுதல் என்பது நமக்கு அழகல்ல.இன்ஷாஅல்லாஹ் அதை உணர்ந்து ஆரோக்கியமான விவாதமாக இதை கொண்டு செல்வேன் ...

    பதிலளிநீக்கு
  17. நான் ஒரு இந்து அல்ல " த‌மிழ‌ன்"11/11/10 5:47 PM

    இந்து அல்லது ஹிந்து என்று ஒரு மதம் உண்டா?

    தங்களை இந்துக்கள் என கூறுபவர்கள் எத்தனை பேருக்கு இந்து மத வேதங்களை பற்றி தெரியும்?

    இந்து மத வேதங்கள் என்ன? யாராவது படித்திருக்கின்றீர்களா?

    மற்ற மதங்களின் வேதங்கள், மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புக்கள் எளிதாக யாவருக்கும் கிட்டுவது போல் ஏன் இந்து மத வேதங்கள் கிட்டுவதில்லை?

    உலகத்தை பாயாக சுருட்டி கடலுக்குள் ...... பிறன் மனைவியை ...உலத்தை படைத்த கடவுள்களின் லீலைகள்.

    அவற்றின் அடிப்படையில் வருடந்தோறும் விடாது கொண்டாட்டங்கள்?

    மாற்று மதங்களை மாய்ந்து மாய்ந்து காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிக்க ஆர்வம் காட்டுபவர்கள் தாங்கள் மதத்தின் வேதம் அல்லது வேதங்கள் இது தான் என கூற முடியுமா?

    பதிலளிநீக்கு
  18. //எம்மதமாயினும்,எக்கோட்பாடாயினும்,ஓர் வரையறை அவசியம்.மனித வாழ்வுக்கும் வரையறை என்பது முக்கியமான ஒன்று.அது இல்லாத வாழ்க்கை கடிவாளம் அற்ற குதிரையின் நிலையை ஒத்தது அல்லவா?ஹிந்துமதம் அப்படி ஒன்றை குறிப்பிடவே இல்லையே.தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதுவே உன்வழி என்கிறது.//

    திரு இரஜின்

    இது பற்றி ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ? எல்லாக் கொள்கையும் மிகச் சரியாக வரையறுக்கப்பட்ட மதத்தைப் பின்பற்றும் மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் ஏற்பட்டு அதைப் பிற மதத்தைப் பின்பற்றோவார் பார்த்து பொறாமை அடையும் நிலையில் எந்த மதமும் தம்மக்களை வைத்திருக்கவில்லை. மறுத்தால் விளக்கம் சொல்லுங்கள்.

    முழுக்க முழுக்க கிறித்துவ நாடு, இஸ்லாமிய நாடு என்றாகிவிட்ட சுமார் நானுறு நூற்றாண்டுக்கு பின்னால் உருவான நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு ஏசுவின் நேரடியான சீடர் செயிண்ட் தாமஸ் வந்தும், இஸ்லாமிய மன்னர்கள் படையெடுத்து வந்து காலூன்றியும் கூட (இவையெல்லாம் பல நாடுகளில் இல்லாமலேயே அவர்களுடைய நாடுகள் குறிப்பிட்ட மதத்தை முழுக்கச் சார்ந்த நாடுகள் ஆகிவிட்டன) இந்தியாவில் கிறித்துவரும் இஸ்லாமியரும் 20 விழுக்காட்டிற்கு மிகவில்லை என்னும் போது கடிவாளம் அற்ற குதிரையாக இருப்பதெ சிறப்புன்னு இந்துக்கள் முடிவு செய்திருக்கிறார்கள், இதில் உங்களுக்கு என்ன வருத்தம், உங்கள் ஆலோசனைகளால் இந்துக்களின் அன்றாட வாழ்வியலை ஏற்றம் செய்ய வைக்க முடியுமா ?

    பதிலளிநீக்கு
  19. ///கிருஸ்தவ,முஸ்லீம்,யூதர்களை தவிர்த்தே, பல்வேறுபட்ட கலாச்சாரங்கள் இந்தியாவில் இருக்கிறது.அந்த வேறுபட்ட கலாச்சார மக்களின்,மற்றும் கிருஸ்தவ,முஸ்லீம்களின், ஒற்றுமையான வாழ்வே இந்தியாவிற்கே உரித்தான "வேற்றுமையில் ஒற்றுமை" எனும் தனிச்சிறப்பு.
    எனது கருத்தும் அதுவே.இது குறித்த எனது பார்வையை"நானும் ஒரு ஹிந்து"எனும் பதிவில் விளக்கி இருப்பேன்.///
    This was possible only because of the Hindu Culture.

    ///அப்படி விரும்பியவர்கள் விருப்பமான வழியில் செல்லலாம் என்றால்,எனது வழியை தெர்வு செய்து முஸ்லீமாக இருக்கும் என்னையும் ஹிந்து என வழ்ங்குவீர்களா?... ///

    அறம் சார்ந்து, அடுத்தவரை துன்பப்படுதாமல், வாழ்பவர் யாராய் இருந்தாலும் அவர் ஹிந்து தான்... So, நீங்களும் தான் :)

    பதிலளிநீக்கு
  20. சகோ தாதாச்சாரி அவர்களே.நான் அந்த வலைபூவை படித்துவருகிறேன்.வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
    ---------------------------------------
    சகோ கோவிக்கண்ணன் அவர்களே..
    கோவப்படவேண்டாம்.எனது எழுத்தில் எங்கேனும்,கண்ணியக் குறைவான,அல்லது வரம்பு மீறிய விமர்சனங்கள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள்.இருப்பின் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்.
    எனது அண்டைவீட்டாரின் நம்பிக்கை பற்றி,நான் அறிந்து கொள்வதில் தவறில்லையே.தெரியாததை சந்தேகமாகத்தானே, வெளிப்படுத்தமுடியும்.
    அதில் உனக்கென்ன அக்கரை எனத் தாங்கள் கேட்டால்?
    நிச்சயம் எந்த அக்கரையும் இல்லை.தாங்கள் சொவது போல் என்னால் ஹிந்துக்களின் அன்றாட வாழ்வில் ஏற்றம் செய்ய முடியாதுதான்.இது வெறும் விஷயத்தை அறியும் முயற்சிதான்.
    இஸ்லாம் குறித்து,எத்துனையோ,ஹிந்துக்கள் உட்பட அனைவரும் கேள்வி எழுப்பத்தான் செய்கிறார்கள்.அவர்களின்,தரமான விமர்சனங்களை நாம் எதிர் கொண்டு,விடையளித்தே வருகிறோம்..நாம் யாரையும் இவ்வாறு,"உனக்கென்ன அக்கரை" என கேட்பதில்லை.நன்றி

    பதிலளிநீக்கு
  21. திரு நியோ ஹிந்து அவர்களே.

    //This was possible only because of the Hindu Culture.//
    ஹிந்துக்கலாச்சாரமும் இவ்வேற்றுமையில் ஒற்றுமை என வழங்கப்பட காரணம் என்பதே சரியாக இருக்கும்.ஏனெனில்,ஹிந்துக்கள் மட்டுமே என்றால், ஒன்றாக வாழும் மற்ற கிருத்தவ,இஸ்லாமியர்களுக்கு இதில் பங்கில்லை என சொல்லமுடியாது.அனைவர் முயற்சியும்,சகிப்புத்தன்மையும் இன்றி,இப்பேறு இல்லை.

    //அறம் சார்ந்து, அடுத்தவரை துன்பப்படுதாமல், வாழ்பவர் யாராய் இருந்தாலும் அவர் ஹிந்து தான்..//
    நன்றி..

    பதிலளிநீக்கு
  22. ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வது போல,
    இப்படி தான் கடவுளை வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இந்து மதத்திலும் இருந்திருந்தால்,
    ௧. இந்துக்கள் மற்ற மதத்தவர்களிடம் இருந்து நல்லவற்றை எடுத்துக்கொள்ளாமலும், அல்லவற்றை கலையாமலும் போய் இருப்போம்.
    ௨. மற்ற கலாச்சாரங்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வளர்ந்து இருக்கவே முடியாது.
    ௩. மற்ற கலாச்சாரங்கள் தொடர்பான அனைத்தும் எங்களுக்கு தீயதாகவே தோன்றி இருக்கும்

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா18/11/10 1:00 PM

    Dear Mr. Razin Eid Mubarak

    If you want to really know about hinduism you have to search a True Guru. then only you will come to know what is hinduism

    One More hindu

    பதிலளிநீக்கு
  24. கோவி . கண்ணன் அவர்களே .
    // இதில் உங்களுக்கு என்ன அக்கறை //
    வாதத்துக்கு பொருந்தாத கேள்வி ....சரியான அக்கறை இருந்திருந்தால்
    என்னைப்போன்றவர்கள் ஏன் மார்க்கத்தை மாற்றுகிறார்கள் ??? என்பதை சற்று சிந்திக்கவும் .
    //ஒருமதத்தில் இலக்கு மட்டுமே முக்கியம்,இலக்கை அடைய பல வழிகள் இருக்கின்றன,உனக்கு எது சரிப்படுகிறதோ அந்த வழியில் போகலாம்,எதுவும் சரிப்படவில்லை என்றால் நீயே ஒரு பாதையை உருவாக்கலாம் என்று சொல்கிறது//
    இங்கே பின்னுட்டபவர்கள் சரியான பதில் இடக்காணோம் ......
    ரஜின் பாய்.....இந்த வாக்கியத்தை நீங்கள் எங்கே பெற்றிர்கள் ? தெரிவிக்கவும்
    இது வேத வாக்கியமாக இருந்தால் இந்துமத பெரியவர்கள் பதில் சொல்லவேண்டும் .
    கடமையும் கூட........மற்றும் இது வேத வாக்கியமாக இல்லாதிருந்தால் ,
    முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்பதே என் கருத்து .

    பதிலளிநீக்கு
  25. ஸலாம் சகோ நாசர்,,

    //என்னைப்போன்றவர்கள் ஏன் மார்க்கத்தை மாற்றுகிறார்கள் ??? என்பதை சற்று சிந்திக்கவும் .//

    என்ன சொல்ரீங்க,,

    இது பத்தி நாம விவாதிக்கலாமா?

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்