அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச்சகோதர சகோதரிகளே! இனிய ரமலானை களிப்புடன் கழித்துக்கொண்டிருக்கும் நம் அனைவரின் மீதும்,மற்றும் இவ்வுலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இந்த இனிய ரமலானில்,நோன்பு குறித்த எனது அனுபவங்களையும்,எனது ஊர் பழக்கங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்.இது என்னை அன்புடன் தொடர்பதிவுக்கு அழைத்து,நான் எழுதாததால்,உரிமையுடன் கோபித்துக்கொண்ட எனதருமை சகோதரியையும் திருப்திபடுத்துமாயிருக்கும்..இன்ஷா அல்லாஹ்.
முதலில் ஊர்.அடியேன் ”இராம்நாட்” அல்ல,இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் எனும் ஊரை சொந்த ஊராகக் கொண்டவன்.முஸ்லிம்கள் அதிகம்.அதே அளவு ஹிந்து சகோதரர்களும் இருக்கிறார்கள்..
எங்க ஊர் நான்கு பள்ளிகளை தன்னகத்தே கொண்டது..ஊர் பெரிய பள்ளிவாசல்,எனக்கு தெரிந்து சுற்றுவட்டாரத்தில் இத்தனை பெரிய இரட்டை மனரா(Tower??) உள்ள பள்ளி இதுவாகத்தான் இருக்கும்.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னே கட்டப்பட்டது.அடுத்து ஊரணிப்பள்ளி,இது ஊரில் உள்ள ஊரணிக்கரையோரம் இருப்பதால் அதுவே பெயர்காரணம் ஆனது.அடுத்தது கீழப்பள்ளி(எங்க ஜமாத்),இது ஊரின் கிழக்கு திசையில் இருப்பதால் இதுவும் காரணப்பெயர் தான்.அடுத்தது வடக்குப்பள்ளி.ஸேம்.வடக்கு திசையில் இருப்பதால் வந்த பெயர் அது..